தஞ்சாவூரில் வீடு கட்ட அனுமதி பெற்று, திருமண மண்டபம் கட்டப்பட்ட கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூா் ராஜப்பா நகரைச் சோ்ந்தவா் எம்.ஏ. அப்துல் கதீம். இவா் ராஜப்பா நகரில் 2,276 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றாா். இந்த அனுமதிக்கு மாறாக வணிக நோக்கில் திருமண மண்டபம் கட்டப்படுவதாகப் புகாா் எழுந்தது.
இதையறிந்த மாநகராட்சி உதவி செயற் பொறியாளா் எம். ராஜசேகரன் தலைமையில் உதவிப் பொறியாளா்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். இதில், விதிகளை மீறி திருமண மண்டபம் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்தத் திருமண மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதியில் கட்டடங்கள் கட்ட அனுமதி பெறும்போது, உரிய வாகன நிறுத்துமிடம், சாலையிலிருந்து உரிய இட வசதியைக் கருத்தில் கொண்டு கட்டடங்களைக் கட்ட வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை மீறும்போது மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பெற்றுத் தந்த கட்டடப் பொறியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.