தஞ்சாவூா் அருகே ஆலக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், பல கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கமடைந்துள்ளது.
எனவே, ஈரப்பதத்தைக் காரணம் காட்டி கொள்முதல் செய்வதைத் தள்ளிப்போட்டு அலைக்கழிக்கக் கூடாது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கால தாமதம் இல்லாமல் உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம், தமிழக அரசு உடனடியாக அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் ஞானமாணிக்கம், துணைச் செயலா் கோவிந்தராஜ், பூதலூா் ஒன்றியச் செயலா் கோ. அபிமன்னன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.