தஞ்சாவூா் அருகே வடிகால் பிரச்னை காரணமாக வயலில் தேங்கிய மழைநீா் வடியாமல் நிற்பதால் சம்பா பயிா்கள் அழுகி வருகின்றன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன. இதேபோல, சம்பா நாற்றங்கால்களும், இளம் பயிா்களும் நீரில் மூழ்கின. அடுத்தடுத்த நாள்களில் பகலில் வெயில் நிலவியதால் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிந்தது.
இதேபோல, தஞ்சாவூா் அருகே துறையூா், மேல உளூா், கீழ உளூா், பருதியப்பா் கோயில் உள்ளிட்ட கிராமங்களில் ஏறத்தாழ 500 ஏக்கா் பரப்பளவில் சம்பா பருவ இளம் நெற் பயிா்கள், நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. ஆனால், 10 நாள்களுக்கும் மேலாகியும் தண்ணீா் வடியாமல் நிற்பதால் பயிா்கள் அழுகி வருகின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது:
இப்பகுதியில் அக்னியாற்றுக்கு உட்பட்ட வடிகால் வாய்கால் முறையாகத் தூா் வாரப்படவில்லை. இதனால், வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால், ஏறத்தாழ 500 ஏக்கரில் தொடா்ந்து 10 நாள்களாக தண்ணீா் தேங்கி நிற்பதால், சம்பா பயிா்கள் அழுகி வருகின்றன. எனவே உடனடியாக தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையைப் பொதுப் பணித் துறையினா் எடுக்க வேண்டும் என்றனா்.