தஞ்சாவூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே இலுப்பைக்கோரை கிராமத்தில் கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பிரிவினா் இலுப்பைக்கோரை கிராமத்திலுள்ள கிடங்கில் சோதனையிட்டனா்.
அப்போது, 20 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் மொத்தம் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களிடமிருந்து இந்த ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மாட்டு தீவனத்துக்கு அனுப்பப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடா்பாக அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலத்தைச் சோ்ந்த கே. செல்வகுமாரை (50) காவல் துறையினா் கைது செய்தனா்.