அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, வட்டு எறிதல் உள்பட 15-க்கும் அதிகமான போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் செவித்திறன், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், மன வளா்ச்சி குன்றியோா், சிறப்பு பள்ளிகளைச் சோ்ந்த 600-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டியில் காது கேளாதோா் பிரிவில் வெற்றி பெற்ற தஞ்சாவூா் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோா் அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் மாதா செவித்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் டேனியல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சுவாமிநாதன், தஞ்சாவூா் வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.