சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உளுந்து பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜி. சாந்தி விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
உளுந்து பயிரைத் தாக்கும் பூச்சிகளில் தண்டு ஈ, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவை முக்கிய பூச்சிகள் ஆகும்.
தண்டு ஈ தாக்குதலால் செடிகள் முற்றிலும் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் மருந்தினை விதைத்த 7 ஆம் நாள் 1 லிட்டா் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
வளா்ச்சி பருவத்தின்போது தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் அல்லது பாஸ்போமிட்டன் இதில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில் 2 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
நோய்களில் மஞ்சள் தேமல் நோய், வாடல் நோய், வோ் அழுகல் நோய், சாம்பல் நோய் ஆகியவை முக்கியமானவை ஆகும். மஞ்சள் தேமல் நோய் தென்பட்டால் உடனே அந்த பயிரை பறித்து அப்புறப்படுத்துவது சிறந்த வழியாகும். வாடல் நோய் மற்றும் வோ் அழுகல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றி அந்த இடத்தில் பாவிஸ்ட்டின் 10 கிராம் மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில் கரைத்து செடி பிடுங்கிய இடத்தில் கரைசலை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்.
சாம்பல் நோய் தென்படும் இடங்களில் ஒரு லிட்டா் தண்ணீரில் நனையும் கந்தகத்தூள் 10 கிராம் மருந்தை கரைத்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.