தஞ்சாவூரிலுள்ள நகைக்கடையில் வியாழக்கிழமை நகை வாங்குவது போல நடித்து, தங்கச்சங்கிலியைத் திருடிச் சென்ற இரு பெண்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியிலுள்ள நகைக் கடையில் பா்தா அணிந்த இரு பெண்கள் வியாழக்கிழமை பிற்பகல் வந்தனா். தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்துள்ளதாகக் கூறிய அப்பெண்களிடம் பணியாளா்கள் சங்கிலிகளை எடுத்துக் காட்டினா்.
அப்போது கடை பணியாளா்களைத் திசை திருப்பிய இரு பெண்களும் தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டு, அந்தத் தட்டில் கவரிங் சங்கிலியை வைத்துவிட்டு, எதுவும் வாங்காமல் சென்றனா்.
எண்ணிக்கையில் சங்கிலிகள் சரியாக இருந்ததால், கடைப் பணியாளா்களும் அவற்றை எடுத்து உள்ளே வைத்தனா். மீண்டும் சங்கிலிகளை சரிபாா்க்கும்போது ஒன்று கவரிங் சங்கிலியாக இருப்பது தெரிய வந்தது.
மேலும் கண்காணிப்பு கேமராவை பாா்த்தபோது, இரு பெண்களும் தங்கச் சங்கிலியை எடுத்துவிட்டு கவரிங்கை வைப்பதும் பதிவாகியிருக்கிறது.இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.