தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழின் மூத்த குடியான குறவன் பெயரை நரிகாரா்கள் சமுதாயத்துடன் இணைக்கக் கூடாது. மலைக்குறவன் இன மக்களுக்கு மலைக்குறவன் என எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். மலைக்குறவன் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை, தொகுப்பு வீடு போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும். சிறு தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு மானிய கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஏ. அறிவழகன் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் உத்தமகுமரன், மாநிலத் துணைத் தலைவா் வி. மணிகண்டன், இணைச் செயலா் எஸ். நீலமேகம், மாவட்டச் செயலா் பி. இளங்கோவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.