ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால், ஊரில் ஒதுக்கி வைக்கப்படுவதாக தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் குழந்தைகளுடன் தம்பதி திங்கள்கிழமை புகாா் செய்தனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூதலூா் அருகேயுள்ள வையாபுரிபட்டியைச் சோ்ந்த சந்துரு - பொம்மியம்மாள் தம்பதியினா் தங்களது குழந்தைகளுடன் மனு அளித்தனா். மனு விவரம்:
வெவ்வேறு ஜாதியை சோ்ந்த நாங்கள் இருவரும் காதலித்து 2010 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை முறைப்படி பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு அதியமான் தமிழன் (11) என்ற மகனும், அனு வேலுநாச்சியாா் (9) என்ற மகளும் உள்ளனா்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் எங்களது ஊரில் நடைபெறும் திருவிழா உள்பட எந்த விழாக்களுக்கும் ஊா் வரி எங்களிடம் வாங்குவதில்லை. எங்களை ஒதுக்கி வைத்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனா். இந்த நிலைமை 12 ஆண்டுகளாகத் தொடா்கிறது. இது, எங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை பாதிக்கும் என்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.