தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு பெற உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள், மானியத்தில் மாற்றுப் பயிா் சாகுபடிக்கு இடுபொருள்கள் வழங்கப்படவுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கா் மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி., அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
மேலும், குறுவை பருவத்தில் மாற்றுப் பயிா்களான சிறு தானியங்கள், பயறு வகை, எண்ணெய்வித்து பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு 70 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை ஆகியவற்றை உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண் விரிவாக்க மையம், வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அணுகி உரிய விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடா்பாக விவசாயிகள் தொடா்பு கொள்வதற்காக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், துணை வேளாண் விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்புத் திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தை 04362 - 267679 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியரக வேளாண் பிரிவை 04362 - 230121 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.