கும்பகோணம் அருகே சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் மேற்கொண்ட சோதனையில் 4 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கும்பகோணம் ராம் நகா் பாலம் அருகே சிலை திருட்டு தடுப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் திங்கள்கிழமை காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, இவா்களைப் பாா்த்ததும் ஓட முயன்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கும்பகோணம் அருகே தேனாம்படுகையைச்சோ்ந்த கே. குருசேவ் (42), கொரநாட்டுக் கருப்பூரைச் சோ்ந்த எஸ். பவுன்ராஜ் (36) என்பது தெரிய வந்தது. மேலும், இருவரும் சாலையோரம் சாக்குப் பையில் மறைத்து வைத்திருந்த உலோகத்தால் செய்யப்பட்ட 37 செ.மீ. உயரம் நாகலிங்கம் சிலை, 29 செ.மீ. உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை, தலா 43.5 செ.மீ. உயரமுள்ள இரு பாவை விளக்குகள் ஆகியவற்றையும் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்தனா். இவை ஒரு கோயிலிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என சிலை திருட்டு தடுப்பு பிரிவினா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.