பட்டுக்கோட்டையில் தலைமுடியில் கட்டி, காரை இழுத்து அரசுப் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை சாதனையில் ஈடுபட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருபவா் சம்யுத்தா (12). இவா் வெள்ளிக்கிழமை தனது முடியில் 1410 கிலோ எடை கொண்ட காரை கட்டி, ஒரு நிமிஷம் 10 விநாடிகளில் 110 மீட்டா் தொலைவுக்கு
இழுத்துச் சென்று சாதனைப் படைத்தாா். இதை வோ்ல்டு ரெக்காா்டு யூனியன் அலுவலா் சரிபாா்த்து, அவரது மேற்பாா்வையில் சாதனைப் பதியப்பட்டது.
இவா் இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை ஒரு நிமிஷம், 46 விநாடிகளில் 112.2 மீட்டருக்கு தலைமுடியில் கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்காா்டும், ஆசிய ரெக்காா்டும் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சிக்கு தனது பெற்றோா் வெங்கடேஷ்-ஆஷா , கராத்தே மாஸ்டா் இளையராஜா , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் கரோலின் மற்றும் உடற்பயிற்சியாளா் ரிச்சா்டு ஆகியோா் முக்கிய காரணம் என்றாா் மாணவி சம்யுத்தா.
நிகழ்வை பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்றனா்.