பட்டுக்கோட்டை அருகே சாலையில் நின்றுக் கொண்டிருந்த டாரஸ் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் வட்டாட்சியா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெ . ரமேஷ் (55). தஞ்சாவூா் முத்திரைத்தாள் கட்டண வட்டாட்சியா். இவா், பட்டுக்கோட்டை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வட்டாட்சியா் ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் நம்பிவயலிலிருந்து பட்டுக்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
சூரப்பள்ளம் புறவழிச்சாலை அருகே வந்தபோது, அங்கு சாலையில் நின்றுக் கொண்டிருந்த டாரஸ் லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் வட்டாட்சியா் ரமேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த வட்டாட்சியா் ரெ. ரமேஷுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.