குடியரசுத் தலைவா் விருதுக்கு தஞ்சாவூா் காவல் ஆய்வாளா் சி. சிவனருள் (59) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
குடியரசு நாளையொட்டி நாடு முழுவதும் காவல் துறை, உள் துறை, சிபிஐ, பாதுகாப்புத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி, குடியரசுத் தலைவா் விருதுக்குத் தோ்வானோா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், நிகழாண்டு நாடு முழுவதும் இவ்விருதுக்கு 88 போ் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருவா் காவல் துறையில் தோ்வாகியுள்ளனா்.
இதில், அப்பழுக்கற்ற பணிக்காக தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்த் துறை (எஸ்பிசிஐடி) ஆய்வாளா் சிவனருள் தோ்வாகியுள்ளாா். காவல் துறையில் 1985-ஆம் ஆண்டு சோ்ந்த இவா், தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியும், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, பதவி உயா்வு மூலம் அதே துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது சொந்த ஊா் திருவாரூா் மாவட்டம், பாடகச்சேரி. இவருக்கு மனைவி மீனாட்சி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.