தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியா் இருக்கை அமைப்பதற்காக, பல்கலைக்கழகமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையாக ரூ. 1 கோடி முதலீட்டில் தொல்காப்பியா் இருக்கை அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இவ்விருக்கையில் தகைசால் பேராசிரியா் மற்றும் ஆய்வு உதவியாளா் நியமிக்கப்பட்டுத் தொல்காப்பிய எழுத்ததிகாரமும் சங்க இலக்கியமும், தொல்காப்பியச் சொல்லதிகாரமும் சங்க இலக்கியமும், தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியமும் என்ற தலைப்புகளிலும், தொல்காப்பியம் முழுமையும் பல்வேறு நிலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் 2023, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2025, டிசம்பா் 31 ஆம் தேதி என மூன்று காலத்துக்கானது.
இவ்விருக்கையின் மூலம் தமிழ்ப் பேராசிரியா்களுக்கும் ஆய்வு மாணவா்களுக்கும் தொல்காப்பியம் குறித்த பயிலரங்குகளும், கருத்தரங்குகளும் இலக்கணத்தில் ஆழங்கால்பட்ட ஆய்வறிஞா்களைக் கொண்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கம் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும். பயிலரங்கத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளவா்களுக்கு முறையான இலக்கணப் பயிற்சி அளிக்கப்படும்.