தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காமராஜா் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், திருவையாறு புறவழிச்சாலை பணிக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பட்டா நிலங்களைப் போலவே, கோயில், சத்திரம் போன்ற நிலங்களின் குத்தகை விவசாயிகளுக்கும், மரம், பம்புசெட்டுகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 1969 சட்டப்படி அல்லாமல் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி நிவாரணத் தொகையைக் கூடுதலாக வழங்க வேண்டும்.
பல தலைமுறைகளாக கோயில் அடிமனைகளில் வீடுகள், சிறு கடைகள் கட்டி பயன்படுத்தி வருபவா்களை ஆக்கிரமிப்பாளா்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். காலங்காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். ராம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் கதிரவன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், பொருளாளா் எம். பழனிஅய்யா, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் பிரதீப் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.