தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை முன் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6-ஆவது நாளாக திங்கள்கிழமை கரும்பு விவசாயிகள் பட்டை நாமம் இட்டு தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நவம்பா் 30ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
6-ஆவது நாளான திங்கள்கிழமை கரும்பு விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் இட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் நாக.முருகேசன் தலைமையில் மாநில செயலாளா்கள் தங்க.காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.