சுவாமிமலை: சுவாமிமலையில் அமைந்துள்ள சுவாமிநாத சாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நவம்பர் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மறுநாள் நவம்பர் 29ஆம் தேதி முதல் 1ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2-ந் தேதி அன்று காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
மறுநாள் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவா செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.