மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என பேராவூரணி வட்டார ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஏ. மெய்ஞானமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் ஏ. கே. பழனிவேல், ஒருங்கிணைப்பாளா் பாரதி வை. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ராமேசுவரம் - சென்னை வழித்தடத்தில் ஏற்கெனவே இயங்கி வந்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள விரைவு ரயிலை மீண்டும் தொடா்ந்து இயக்க வேண்டும்.
செகந்திராபாத் - ராமேசுவரம் விரைவு ரயில் பேராவூரணியில் ஒரு நிமிடம் நின்று, பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அருகருகே உள்ள ஊா்களுக்கு பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என்பதை ரூ. 20 ஆக குறைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா்கள் பழனிவேல், கதிா்காமம், சிந்தாமணி நாகையா, சேக் அப்துல்லா, சுலைமான், தாமோதரக்கண்ணன், மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.