கும்பகோணம் அருகே திங்கள்கிழமை அன்னதானம் செய்வதற்காக உணவு பாத்திரங்களுடன் மினி லாரியில் சென்ற பல் மருத்துவா் மற்றொரு மினி லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட காரைக்குறிச்சி பட்டம் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (34). பொறியாளா். இவரது மனைவி இமயவல்லி (33) அரியலூரில் பல் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், இருவரும் கும்பகோணத்திலுள்ள கோயிலுக்கு அன்னதானம் செய்வதற்காக மினி லாரியில் திங்கள்கிழமை உணவுப் பாத்திரங்களுடன் சென்று கொண்டிருந்தனா். நீரத்தநல்லூா் சாலை அசூா் குளம் அருகே சென்ற இந்த மினி லாரியும், எதிரே வந்த மற்றொரு மினி லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதனால், மினி லாரியிலிருந்து கீழே விழுந்த இமயவல்லி பலத்தக் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.