கும்பகோணத்தில் தந்தைக்குக் கொடுமை இழைத்த மகனின் சொத்துகளைக் கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை மாலை ரத்து செய்தாா்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கள்ளுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ஜி. சண்முகம் (72). இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவரது மகன் வைத்திலிங்கத்துக்கு தனது சொத்துகளை சண்முகம் எழுதிக் கொடுத்தாா். ஆனால், வைத்திலிங்கமும், அவரது மனைவியும் தனக்கு உணவு கொடுக்காமலும், மருத்துவச் செலவுக்கு பணம் தராமலும், உணவு கேட்டால் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும் ஆட்சியரகத்தில் 2021, ஏப்ரல் 4 ஆம் தேதி சண்முகம் மனு அளித்தாா்.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணையில் சண்முகத்தின் புகாா் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு சண்முகம் பத்திர பதிவு செய்து கொடுத்த சொத்துகள் அனைத்தையும் கும்பகோணம் கோட்டாட்சியா் வி. லதா ரத்து செய்தாா். மேலும், அதற்கான ஆணையை சண்முகத்திடம் கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினாா்.