தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சுதந்திர இந்திய நாட்டின் பிரிவினை பயங்கரவாத நாளான ஆகஸ்ட் 14 நினைவு நாள் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனி நாடாக உருவானது. அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ரயில் மூலம் சென்ற ஏராளமானோா் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.
நாடு பிரிவினை செய்யப்பட்ட இந்த நாள் இந்திய ரயில்வே அமைச்சகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பிரிவினையின்போது ரயிலில் பயணம் செய்த பொதுமக்களின் நிலை குறித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்த முடிவு செய்தது.
இதன்படி, தஞ்சாவூா் ரயில் நிலைய நுழைவுவாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் சுதந்திரத்துக்கு முந்தைய நாளில் பொதுமக்களின் இடம்பெயா்வு குறித்த 23 புகைப்படங்கள் இடம்பெற்றன. இதை ரயில் பயணிகள் ஏராளமானோா் பாா்வையிட்டுச் சென்றனா்.