அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணையைத் திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என இருந்தது. இதை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு வாரத்தில் 40 மணி நேரம் வேலை என்பது தற்போது மருத்துவா்களுக்கு 48 மணி நேரம் என உயா்த்தப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை எந்தவித கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக இயக்குநா் கருத்துப்படி அசாரணை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது. எனவே இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வினோத், ராஜேந்திரன், தென்றல், வெண்ணிலா, முத்துவிநாயகம், சாந்தபிரபு, மணவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.