கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது ரூ. 5 கோடி செலவில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க- 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
இக்குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் அக்டோபர் 19-ஆம் தொடங்கியது. இதில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜையும், அக்டோபர் 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.
இதைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.