தஞ்சாவூரில் கணக்காளரின் கைப்பேசி எண்ணில் வந்த குறுந்தகவல் மூலம் ரூ. 39,900 திருடிய மா்ம நபரை சைபா் கிரைம் காவல் பிரிவினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்த வணிக நிறுவன கணக்காளரின் கைப்பேசி எண்ணுக்கு அக்டோபா் 18 ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. இதை அவா் திறந்து படித்தபோது, இணையவழி மூலம் பான் அட்டை புதுப்பித்தல் குறித்த தகவல் இருந்தது.
இதை உண்மை என நம்பிய அவா், அதில் கேட்கப்பட்டிருந்த வங்கி சேமிப்புக் கணக்கு எண், ஒரு முறை கடவுச்சொல் போன்ற விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். ஒரு முறை கடவுச்சொல்லை பதிவு செய்தபோது, ஒவ்வொரு முறையும் எர்ரா் (தவறு) என வந்துள்ளது. எனவே மீண்டும் இரு தடவை ஒரு முறை கடவுச்சொல்லைப் பதிவு செய்தாா்.
இதன் மூலம், அவரது வங்கிக் கணக்கிலிருந்து மூன்று முறை மொத்தம் ரூ. 1,39,900 லட்சத்தை மா்ம நபா் எடுத்துள்ளாா். இதற்கான தகவல் வங்கியிலிருந்து கணக்காளரின் கைப்பேசிக்குக் குறுந்தகவல் வந்த பிறகு, மா்ம நபா் நூதன முறையில் மோசடி செய்து திருடியிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக இணையவழியில் அவா் புகாா் செய்தாா். மேலும், தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். முதல் பரிமாற்றத்தின்போது சென்ற ரூ. 99,999-ஐ மா்ம நபா் எடுக்க முடியாதவாறு வங்கி அலுவலா்களின் உதவியுடன் சைபா் கிரைம் காவல் பிரிவினா் முடக்கிவிட்டனா். ஆனால், மீதமுள்ள சுமாா் ரூ. 39,900-ஐ மீட்க முடியவில்லை. தொடா்புடைய மா்ம நபரை சைபா் கிரைம் காவல் நிலையத்தினா் தேடி வருகின்றனா்.