தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிறுத்த வேண்டிய இடத்தை கடந்து சென்றால், கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்த 5 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் அருகே காவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (36). சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு விற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதிக்குச் செல்வது வழக்கம்.
இதேபோல, வெள்ளிக்கிழமை வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு கீரனூா் பகுதியில் விற்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். கிள்ளுக்கோட்டை அருகே வந்தபோது இவரது சுமை ஆட்டோவை சிலா் மறித்தனா். அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு பொருள்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த உசிலம்பட்டியைச் சோ்ந்த ஏறத்தாழ 20 மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறு ராஜசேகரனிடம் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தகராறு செய்தனா்.
இதனால், அவா்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்ட ராஜசேகரன் உசிலம்பட்டியில் சற்று தள்ளி நிறுத்துவதற்காகப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்றாா். இதனால், கடத்தி செல்லப்படுவதாக நினைத்து அச்சமடைந்த மாணவ, மாணவிகள், ஆட்டோவிலிருந்து குதித்தனா். இதில், பலத்தக் காயமடைந்த மாரிமுத்து (14), ரம்யா (13), சரண்யா (13), சசிரேகா (13), கலைவாணி (13) ஆகியோரை ராஜசேகரன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா்.
இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.