கும்பகோணத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் 134-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கணித மேதை என போற்றப்படும் சீனிவாச ராமானுஜன் கடந்த 1887-ஆம் ஆண்டு டிச.22-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்து கும்பகோணத்தில் கல்வி பயின்றாா். சீனிவாச ராமானுஜன் பல்வேறு கணித சூத்திரங்களை கண்டுபிடித்ததால் இவா் கணித மேதை என போற்றப்படுகிறாா்.
இந்நிலையில், சீனிவாச ராமானுஜன் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவிலுள்ள அவருடைய இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் கணித மேதை ராமானுஜன் படித்த நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 20-ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கேற்கும் தஞ்சாவூா் மாவட்ட பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் வி. சுகுமாரன், பள்ளிச் செயலா் பி.ஆா்.பி. வேலப்பன், முன்னாள் மாணவா் சங்கச் செயலா் வி. சிவக்குமாா், தலைமையாசிரியை ஆா். விஜயா, விழா ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.