பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் அமைச்சா் எஸ்.டி. சோமசுந்தரத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்.டி. சோமசுந்தரத்தின் சொந்த ஊரான செண்டங்காடு கிராமத்திலுள்ள அவருடைய சிலைக்கு கிராமத்தினா், உறவினா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வில், கல்லூரி முதல்வா் பி. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா்கள் அத்தி ஆா்.ஏ. மாணிக்கம், டி. சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியா் ஆா். ஸ்ரீதரன் வாழ்த்துரை வழங்கினாா்.
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்த மாணவருக்கான கல்வி உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயை மாணவா் எஸ்.வி. பிரஜனுக்கு, கல்லூரி இயக்குநா் டி.சுவாமிநாதன் வழங்கினாா்.
விபத்தில் கால் இழந்த மாணவா் காா்த்திகேயனுக்கு மருத்துவ உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயை கல்லூரி இயக்குநா் அத்தி ஆா்.ஏ.மாணிக்கம் வழங்கினாா். கல்லூரி ஆசிரியா்கள் அலுவலா்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எஸ்.டி. சோமசுந்தரம் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக, கல்லூரியின் ஆங்கிலத் துறை விரிவுரையாளா் வி. ராஜன் வரவேற்றாா். நிறைவில்,
கல்லூரி துணை மென்பொருளாளா் எஸ். சுபதா்சனி நன்றி கூறினாா்.