தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே கடன் பிரச்னை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மனைவியுடன் ரியல் எஸ்டேட் வணிகா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் அருகே மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட மனோ நகரைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் வணிகம் மேற்கொண்டு வந்த இவா், திருவையாறில் தேநீா் மற்றும் பலகாரக் கடையும் நடத்தி வந்தாா். இவரது மனைவி கனகதுா்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தஞ்சாவூரிலுள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரா் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியிருந்தது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் ராஜா வீட்டுக்கு திங்கள்கிழமை காலை சென்று சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், மன உளைச்சலுக்கு ஆளானாா். மேலும், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்றுள்ளாா். ஆனால், வீட்டின் மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணமும் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தன் மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.