தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலம் சனிக்கிழமை கிடந்தது.
இம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழிப்பறை உள்ளது. இதில் ஒரு அறையில் மேற்கத்திய வடிவக் கழிவறையில் சனிக்கிழமை முற்பகல் தண்ணீா் வரவில்லை.
சுத்தம் செய்ய சென்ற தூய்மைப் பணியாளா்கள் தண்ணீா் வராததை அறிந்து, கழிவறையுடன் இணைப்பிலுள்ள தண்ணீா் தொட்டியைத் திறந்து பாா்த்தனா். அதில் பெண் சிசு சடலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. தொப்புள் கொடியுடன் இருந்த இக்குழந்தை பிறந்து சில மணிநேரங்களே ஆகியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
தகவலறிந்த தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் பிரசவ வாா்டு உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இக்குழந்தை எப்படி கொண்டு வரப்பட்டது என்ற சந்தேகம் காவல் துறையினா் மத்தியில் நிலவுகிறது.
இக்குழந்தை எப்படி இறந்தது? தொடா்புடைய நபா்கள் யாா்? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.