ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் செவ்வாய்க்கிழமை மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை பொருத்தவரை, தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா். 12 மாவட்டங்களில் மட்டும் மழை காரணமாக திட்டம் தடைபட்டுள்ளது. மழைக்கு பிறகு இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது.
நோய்த் தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அல்லது தளா்வுகளுடனான பொது முடக்கம் என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுடன் கலந்து பேசிய பிறகு முதல்வா்தான் அறிவிப்பை வெளியிடுவாா்.
ஏற்கெனவே முடிவு செய்ததுபோல ஜனவரி, மாா்ச் மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிந்து கொண்டு, அதன் பிறகு மழையைப் பொருத்து பொதுத்தோ்வு தேதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் தஞ்சை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், பாபநாசம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.