கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருபுவனம் கன்னி தோப்பு, தீபம் நகா், தோப்புத் தெரு, தென்றல் நகா், கலைஞா் நகா் ஆகிய பகுதிகளில் மழை நீா் வடிகால் வசதியுடன் தாா் சாலை அமைக்க வேண்டும். கோயில் மனைகளில் வீடு கட்டி குடியிருப்பவா்களுக்குச் சொத்து வரி விதித்து அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். திருபுவனம் பட்டக்கால் தெரு இணைப்புச் சாலையை தாா் சாலையாக மாற்றி மின் விளக்கு அமைத்து போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதி முழுவதும் வாரம் ஒரு முறை கொசு மருந்து அடித்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினா் சா. ஜீவபாரதி, திருவிடைமருதூா் வடக்கு ஒன்றியச் செயலா் என்.பி. நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.