தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை பயிா்கள் சாய்ந்தன.
மாவட்டத்தில் சில நாள்களாக மாலை, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதேபோல, திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வாசல் தென்பாதியில் 48.2 மி.மீ. மழை பெய்தது.
தஞ்சாவூா் அருகேயுள்ள கணபதி அக்ரஹாரம், மணல்மேடு, கபிஸ்தலம், சாலியமங்கலம், கோவிலூா், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் பெய்த பலத்த மழையால் ஏறத்தாழ 200 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், அறுவடையாகும் தருணத்தில் மழை பெய்வதால் நெற்பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல்மணிகள் கருப்பாக மாறியும், ஈரப்பதம் அதிகரித்தும் காணப்படுவதால், மகசூல் கிடைத்தும் பலனில்லாமல் உள்ளது என்றனா்.
மின்கம்பங்கள் சேதம்:
பாபநாசம் அருகே சில கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. இடையிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை மாலை வரை மின் விநியோகம் கிடைக்காமல் அய்யம்பேட்டை பகுதியில் 20-க்கும் அதிகமான கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.
மழையளவு:
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
நெய்வாசல் தென்பாதி 48.2, வெட்டிக்காடு 43.8, பட்டுக்கோட்டை 34, அய்யம்பேட்டை 32, கும்பகோணம் 30.3, பாபநாசம் 29, மதுக்கூா் 27, அதிராம்பட்டினம் 24.9, மஞ்சளாறு 24, அணைக்கரை 23.2, தஞ்சாவூா் 22.5, திருவிடைமருதூா் 19.3, திருவையாறு 16, ஒரத்தநாடு 14.8, வல்லம் 14, குருங்குளம் 11, பூதலூா் 7.2, திருக்காட்டுப்பள்ளி 5.8, கல்லணை 3.2, ஈச்சன்விடுதி, பேராவூரணி தலா 2.