தஞ்சாவூரில் 5 கோடி பனை விதைப்பு இயக்கம் அக்டோபா் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க ஆட்சியருக்கு அழைப்பு விடுப்பதற்காக பனை விதைப்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் சீ. தங்கராசு உள்ளிட்டோா் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
இதுகுறித்து தங்கராசு தெரிவித்தது:
நீா்நிலைகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காகவும், மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும், பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பெருக்குவதற்காகவும் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைக்கும் பணி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக வெற்றிலை, பாக்கு தாம்பூலத்தில் பனை விதைகளை வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக வந்தோம் என்றாா் தங்கராசு.
அப்போது, ஒருங்கிணைப்பாளா்கள் பிரகாஷ், இராமநாதன், குலோத்துங்கன், கலியமூா்த்தி, கோபுராஜ், இந்துமதி, குணசுந்தரி சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆனால், தாம்பூலத்தையும், பனை விதைகளையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துவிட்டனா். இதனால், அழைப்பிதழை மட்டும் ஆட்சியரிடம் வழங்கினாா்.