அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிவேக காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
அதிராம்பட்டினம் பகுதியைச் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்கள் தினமும் அதிகாலை தொடங்கி மாலை வரை படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து அதிவேக காற்று வீசியது. இதனால், வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இதனால், அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
துறைமுகங்களில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தைவிட கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.