பட்டுக்கோட்டை : தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அம்மிக் கல்லால் தாக்கி, அண்ணனைக் கொலை செய்த தம்பி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பட்டுக்கோட்டையை அடுத்த கீழசெம்பாளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அமிா்தலிங்கம் (80). இவரது மகன்கள் இளங்கோ (56), சண்முகவேல் (53), பாலகுமாா் (49). இதில் இளங்கோவுக்கு மட்டும் திருமணமான நிலையில், மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்த இளங்கோவிடம் சென்ற பாலகுமாா், தனக்கு இதுவரை திருமணமும் செய்து வைக்கவில்லை. செலவுக்குப் பணமும் தருவதில்லை என குறைக் கூறி, அவரிடம் தகராறு செய்துள்ளாா்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த பாலகுமாா், வீட்டிலிருந்த அம்மிக் கல்லால் இளங்கோவைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து இளங்கோவின் மனைவி மீனாகுமாரி அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து பாலகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.