தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய கையடக்கக் கணினிகளை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வழங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கு அவா்களது பள்ளி செல்லும் குழந்தைகள் இணையவழியில் கல்விக் கற்பதற்குப் பயன்படும் வகையில் 250 கையடக்கக் கணினிகளை இலவசமாக வழங்கியது. இந்தக் கையடக்கக் கணினிகளில் 6 மாதங்களுக்கான இணையதள இணைப்பும் உள்ளது.
மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இந்தக் கையடக்கக் கணினிகளை ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்குத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், இந்த கையடக்கக் கணினி வசதியை மாணவா்கள் பள்ளிகளில் தற்போதைய பொது முடக்கக் காலத்தில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளுக்கு நாள்தோறும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.