பாபநாசம் அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அய்யம்பேட்டை காவல் சரகம், இலுப்பக்கோரை ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் (50). அந்தப் பகுதி காவிரி ஆற்றில் சிலா் மணல் கடத்துவதாக இவருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்களை தட்டிக் கேட்டாராம். பின்னா், ராஜ்குமாா் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இந்நிலையில், ராஜ்குமாா் வீட்டுக்கு சென்ற மாகாளிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் யோகேஸ்வரன்(25) என்பவா் மணல் அள்ளுபவா்களை ஏன் மிரட்டுகிறாய் என கேட்டு, ராஜ்குமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி செங்கல்லால் அவரது முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து யோகேஸ்வரனை கைது செய்தனா்.