தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கு, மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறார். இதில், புதிய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் பொருள்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், இக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் தீப்பற்றியது. பிளாஸ்டிக் பொருள்கள் முழுவதிலும் தீ பரவியதால், பெரும் விபத்தாக மாறிவிட்டது. இதனிடையே, அடுத்துள்ள அசோக்குமாரின் மரக்கடைக்கும் தீ பரவியது. இதில், பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதன் காரணமாக எதிரில் ஆள்கள் வருவது தெரியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்தது.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 வாகனங்களில் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் நீண்ட நேரமாக ஈடுபட்டுள்ளனர். தீ பற்றி எரிந்த வேனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பட்டாசு விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.