தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 950 விவசாய மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இயக்குநா் எம்.ஏ. ஹெலன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் இலவச விவசாய மின் இணைப்புகள் கேட்டு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனா்.
இதனிடையே, கடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வா் நிகழாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தாா்.
இதையடுத்து தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல்வா் அறிவித்தபடி விவசாய மின் இணைப்புகளை துரிதமாக வழங்க வேண்டும் என கோரி, விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை சில மாதங்களாக நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இயக்குநா் எம்.ஏ. ஹெலன் 50,000 மின் இணைப்புகள் தமிழகம் முழுவதும் வழங்குவதற்கான அறிவிப்பை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டாா்.
இதில் 25,000 இணைப்புகள் தத்கல் திட்டத்திலும், 25,000 இணைப்புகள் பதிவு மூப்பு மற்றும் சுயநிதி விருப்ப திட்டத்தின் கீழும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2003, மாா்ச் 31- ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்குப் பதிவு மூப்பு அடிப்படையிலும், தத்கல் திட்டத்திலும், சுய விருப்ப நிதி திட்டத்தின் கீழும் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 950 மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது என இயக்குநா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.