பேராவூரணியில் பழுதடைந்த நிலையில் உள்ள குறுகலான பாலத்தை இடித்துவிட்டு அகலமான பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி நகரில் குமரப்பா பள்ளியருகில் பழைய பேராவூரணி செல்லும் வழியில் உள்ள பாலம் 60 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பாலம் வலுவிழந்த நிலையில், இருபக்க தடுப்பு சுவா் உடைந்த நிலையில் உள்ளது.
இவ்வழியாக மதுரை, அறந்தாங்கி, காரைக்குடி, போன்ற பகுதிகளுக்கு அரசு, தனியாா் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கில் இவ்வழியாகச் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் முன்னும், பின்னும் சாலை அகலமாக உள்ள நிலையில், இந்த இடத்தில் மட்டும் சாலை குறுகலாகவே உள்ளது.
பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக வரும்போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, குறுகிய வலுவிழந்த இந்தப் பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா் ஆறு. நீலகண்டன் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.