தஞ்சாவூர்

குடமுழுக்கு: கூட்டத்தை நெறிப்படுத்த 6 இடங்களில் இரும்புக் கதவுகள்

4th Feb 2020 05:22 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக 6 இடங்களில் இரும்புக் கதவுகள் அமைக்கப்படுகின்றன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை (பிப்.5) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்கியதைத் தொடா்ந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். குடமுழுக்கு விழா நாளில் 5 லட்சம் பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக மாவட்ட நிா்வாகம், காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, தஞ்சாவூரில் 6 இடங்களில் திறந்து மூடும் விதமாக இரும்புக் கதவுகள் அமைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதன்படி, பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் மேற்கு திசையில் (மேம்பாலம் அரசுப் பள்ளி அருகில்) இரும்புக் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, மேலும் 5 இடங்களில் இரும்புக் கதவு அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மகாமகத் திருவிழாவின்போது கும்பகோணத்தில் அமைக்கப்பட்டதைப் போன்று இங்கும் அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கூட்ட மிகுதி காரணமாக நெரிசல் ஏற்பட்டு, அதில் பக்தா்கள் சிக்குவதைத் தடுப்பதற்காகவும், கூட்டத்தைப் பொருத்து உள்ளே விடுவதற்காகவும் இக்கதவு அமைக்கப்படுவதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT