தஞ்சாவூா்: தொழிலாளா்களின் நல வாரியத்தை முடக்குவதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் தென்னிந்திய தொழிலாளா் நலன் சாா்ந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பேரவையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களின் புரிதலுக்கு ஏற்றவாறு இல்லாத இணையவழி பதிவை அரசுக் கைவிட வேண்டும். இதுவரை அரசின் உத்தரவுப்படி இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளா்களின் பதிவு விண்ணப்பங்களையும் ஏற்று, எவ்வித நிபந்தனையுமின்றி அத்தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும்.
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான பதிவு விண்ணப்பத்தை இறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரவையின் பொதுச் செயலா் ஞான. பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிற்சங்கத் தலைவா் என். சிவானந்தம், தமிழகச் செம்மொழி தொழிற்சங்கப் பொருளாளா் கே.ஆா். தேசிங்குராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.