தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரோனா வைரஸ் தொற்றுள்ளவா்களுக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளைக் கவனிக்கும் பணியில், கூடுதலாகச் செவிலியா்கள் தற்காலிமாக (மூன்று மாதங்களுக்கு) ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட உள்ளனா்.
செவிலியா் பணிக்கு செவிலியப் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பிக்க விரும்புவோா் தன் சுயவிவரப் படிவம், கல்வி, அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (பொது) நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம்.