தஞ்சாவூர்

2 லட்சம் டன் குப்பைகள் பிரித்து விரைவில் அகற்றப்படும்

22nd Sep 2019 03:37 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில்  குவிந்துள்ள2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என்றார் அதன் ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன்.
தஞ்சாவூரில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், துப்புரவுப் பணியாளர்களுக்கான 8 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: நகரம் தூய்மையாகக் காணப்படுவதில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. மக்களிடம் துப்புரவுப் பணியாளர்கள் அணுகி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்க வேண்டும்.
முன்பு மாநகராட்சி குப்பைக் கிடங்குகளில் உள்ள உரங்களை விவசாயிகள் காசு கொடுத்து வாங்கிச் சென்றனர். ஆனால், தற்போது நெகிழிப் பொருள்கள், கண்ணாடி போன்றவை குப்பைக் கிடங்கில் சேருவதால், அதை நிலத்தில் போட்டால் மண் வளம் பாதிக்கும் என யாரும் வாங்க முன்வருவதில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில், 2 லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை பிரித்து விரைவில் அகற்றப்படும். துப்புரவுப் பணியாளர்கள் சேகரிக்கும் ஒவ்வொரு குப்பையும் காசுதான். எனவே, துப்புரவுப் பணியாளர்கள் இதில் பெற்ற பயிற்சி மூலம் அதை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் ஆணையர். 
இம்முகாமில் யோகா பயிற்சி, குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறை, குப்பைகளைக் காசாக்குவது, புதை சாக்கடை, நச்சுத் தொட்டிகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் நகர்நல அலுவலர் நமச்சிவாயம், யோகா பயிற்சியாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் டெய்சி ராணி, உதவிப் பொறியாளர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT