பாபநாசம் அருகே மின் கசிவின் காரணமாக 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
கபிஸ்தலம் காவல் சரகம், கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி கஸ்தூரி (30 ). கூலி தொழிலாளி. இவருடைய கூரை வீட்டில் வியாழக்கிழமை மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதில் இவருடைய கூரை வீட்டின் ஒருபகுதி தீயில் எரிந்து சேதமானது. விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்த குமார் மனைவி சித்ரா(42). இவரது கூரை வீட்டிலும் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் சித்ராவின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் தனி வட்டாட்சியர் கார்த்திகேயன், வருவாய் அலுவலர் வினோலியா, பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.கோபிநாதன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகள் தலா ரூ. 4,100 ரொக்கம், வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.