பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கஜா புயலால் சேதமடைந்த குடிநீர் மற்றும் கழிப்பறை கட்டமைப்புகளை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தஞ்சை, நாகை மாவட்டங்களில் கஜா புயலால் அரசுப் பள்ளிகளில் குடிநீர் அமைப்புகள், கழிப்பறைகள் பலத்த சேதமடைந்தன. சேத விவரங்களை திருச்சியை மையமாக கொண்டு செயல்படும் கிராமாலயா நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தி, மும்பையிலுள்ள என்.எஸ்.இ.பவுண்டேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உதவியுடன், முதல்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 18 அரசுப் பள்ளிகளிலும், நாகை மாவட்டத்தில் 12 அரசுப் பள்ளிகளிலும் புயலால் சேதமடைந்த குடிநீர், கழிவறை ஆகிய சுகாதார வசதிகளை மறுசீரமைப்பு செய்து தர முன்வந்துள்ளது.
இதன்படி, மேற்கண்ட 2 மாவட்டங்களைச் சேர்ந்த 30 அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கான சேதமடைந்த சுகாதார வசதிகளை கிராமாலயா நிறுவனம் புதுப்பித்து தரவுள்ளது.
கழிவறைகளில் தண்ணீர் வசதி செய்து, வண்ணம் பூசி, டைல்ஸ் பதித்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை மறு சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) க.வினோத்குமார் தலைமை வகித்தார். கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்
வி. முரளிதரன், தொழில்நுட்ப அலுவலர்கள் எஸ். சிவனேசன், கே. ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில்..... ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில், ரூ. 3.20 லட்சத்தில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை மறுசீரமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது .
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ. 1.40 லட்சத்தில் 900 மீட்டர் தொலைவுக்கு முள்வேலி அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே. அடைக்கலம், பொருளாளர் வீரசிங்கம், துணைத் தலைவர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், தொழில்நுட்ப அலுலர்கள் சிவனேசன், ஜெயக்குமார், கோபி, ராஜசேகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.