தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடியைச் சேர்ந்தவர் ஜி. புண்ணியமூர்த்தி (32). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கந்தர்வகோட்டை பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவர் பணிமனையில் பாம்பு கடித்ததில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுவதற்கான ரசீதில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் என்பதை அடித்துவிட்டு கூலித் தொழிலாளி என எழுதப்பட்டதாம். இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சவக் கிடங்கு முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரேத பரிசோதனை ரசீதில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் என எழுதப்பட வேண்டும். கந்தர்வகோட்டை பணிமனையில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, பிரேத பரிசோதனை ரசீதில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் என எழுதி தரப்பட்டதையடுத்து, சடலத்தை வாங்கிச் சென்றனர்.