கும்பகோணத்தில் திங்கள்கிழமை பேருந்தில் பயணியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சாலைக்காரத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகதாஸ் (27). கும்பகோணத்துக்கு வந்த இவர் புதிய பேருந்து நிலையத்தில் காட்டுமன்னார்கோவில் நோக்கிச் செல்லும் பேருந்தில் திங்கள்கிழமை ஏறி அமர்ந்தார். அப்போது, இவரது பையில் இருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது. இதை பேருந்தில் இருந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சங்கர் மனைவி மரகதம் (47) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து மரகதத்தை கைது செய்தனர்.