பிருந்தாவன் பள்ளி100 சதவீதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில் பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 371 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 490-க்கும் மேல் 3 பேரும், 480-க்கு மேல் 22 பேரும், 450-க்கு மேல் 84 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், கணிதத்தில் 2 பேரும், அறிவியலில் 6 பேரும், சமூக அறிவியலில் 24 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 492, 491, 489 மதிப்பெண்கள் எடுத்த இப்பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் டி.சுவாமிநாதன், செயலர் ஜெ.சரவணன், இயக்குநர்கள் எம்.ராமையா, சி.கோபாலகிருஷ்ணன், எம்.ரெத்தினகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
லண்டன் கிருஷ்ணமூர்த்தி பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் லண்டன் கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக 500-க்கு 491, 490, 489 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சியடைந்த மாணவர்களையும் பள்ளியின் தாளாளர் து. கலியராஜ், முதல்வர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். தேர்வு எழுதிய மாணவர்களில் 14 பேர் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 36 பேர் 450-க்கு மேலும், 79 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கொன்றைக்காடு அரசுப் பள்ளி 100% தேர்ச்சி
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 144 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 500-க்கு 460, 459, 440 மதிப்பெண்கள் எடுத்த மாணவ,
மாணவிகளையும், தேர்ச்சியடைந்தவர்களையும், மாணவர்களின் வெற்றிக்கு வித்திட்ட பள்ளித் தலைமையாசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர் .
லாரல் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனர்.
பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 493, 491, 490 மதிப்பெண்கள் பெற்ற இப்பள்ளி மாணவிகளை பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பள்ளி இயக்குநர்கள் கே. பாரத், ஏ. எலிசபெத் தேவாசீர்வாதம், பள்ளி முதல்வர் பா. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜி.ராஜேந்திரன், ஏ.ராபர்ட், உடற்கல்வி இயக்குநர் ஆர்.கிட்டப்பா மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு தேர்வில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் 490-க்கும் மேல் 3 பேரும், 480-க்கு மேல் 23 பேரும், 475-க்கு மேல் 38 பேரும், 450-க்கு மேல் 62 பேரும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும், அறிவியலில் ஒருவரும், சமூக அறிவியலில் 36 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேராவூரணி அரசு மகளிர் பள்ளி100 சதம் தேர்ச்சி
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 208 மாணவிகளும் தேர்ச்சியடைந்தனர்.
தனியார் பள்ளிகளே 100 சத தேர்ச்சிக்காக தடுமாறும் நிலையில், போதிய ஆசிரியர்கள் இன்றியும் சாதாரண நிலையில் உள்ள கிராம பகுதி மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சி. கஜானாதேவி கூறியது: ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் அனைத்து மாணவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்க முடியும். இந்தாண்டு 100 சத தேர்ச்சியை இலக்காக கொண்டு செயல்பட்டோம். கஜா புயலால் மாணவிகள் மனரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலும், சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்தபோதெல்லாம் சிரமம் பார்க்காமல் வந்தார்கள். மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இதை சாதிக்க முடிந்தது என்றார்.